தகவல் அனுப்பி சரி பார்த்த வண்ணம் இருந்தனர் வாசகியர்

'கொரோனா' (உ)பயத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள், வைரஸ் தொற்றுக்கு அஞ்சி நாளிதழ்களைத் தொட்டு வாசிக்க தயங்குகின்றனர்' என, புதுசாக சிலர் கிளப்பிவிட்ட புரளியை, வாசிப்பையே உயிராக நேசிக்கும் வாசகர்கள் அடியோடு புறந்தள்ளி விட்டதை, 'நாயகியருக்கு சவால்' குவிஸ் போட்டி உறுதிப்படுத்தி இருக்கிறது. நம்பகமான, உண்மையான, உறுதியான, அதிகாரப்பூர்வத் தகவல்களைப்பெற எப்போதும் போல வாசகர்கள் நாளிதழ்களை வாசிக்கின்றனர் என்பதையும் அறிய முடிந்தது.

'நாயகியருக்கு சவால்' என்ற தலைப்பில், இல்லத்தரசிகளுக்காக, 'தினமலர்' நேற்று முதல், ஏழு நாட்களுக்கு துவக்கியுள்ள குவிஸ் போட்டி, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. போட்டி அறிவிக்கப் பட்ட முதல் நாளிலிருந்தே, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு முதலில் விரைந்து அனுப்பும், 25 இல்லத்தரசிகளுக்கு, தினந்தோறும், 25 'டிடிகே பிரஸ்டீஜ் மல்டிகுக்கர் 2.0' பரிசாக வழங்கப்படும்' என, 'தினமலர்' அறிவித்ததுதான் தாமதம், முதல் நாளில் இருந்தே 'ஹாய்!' என, தகவல் அனுப்பி சரி பார்த்த வண்ணம் இருந்தனர் வாசகியர்.